கதிர்நிலம்

My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Monday, December 21, 2009

o தீபச்செல்வன் ன் வலைபூவிலிருந்து
----------------------------------------------------------------
அவர்கள் பெருங்கனவுடனே
மரணத்தை முத்தமிட்டனர்.
கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட
கல்லறைகளும் நம்மிடம் இல்லை.
தாய்மார்கள் தீப்பந்தங்களையும்
தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர்.
மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன்
கல்லறைமீதான
தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது.
இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை.
இலைகளில் குருதி ஒழுக
பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின்கம்பத்தில் மோதி
இல்லாதவர்களை அழைக்கிறது
நம்பிக்கையற்ற மனம்.
கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு
அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம்.
அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல்
நெருப்பில் கிடந்து பொசுங்குகிறது.
அவர்களை முழுமையாக
அழித்துவிட்டதாக இந்த நாளை
பிரகடனம் செய்கின்றனர்.

அப்பாவுக்காக தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை
மண்ணை கிண்டி
கல்லறையை தேடிக்கொண்டிருக்கிறது.
நமது ஞாபகத்தின் கடைசி சொத்தையும்
அவர்கள் மிக வேகமாக அழித்தனர்.
அழுவதற்காக இருந்த
உரிமையையும் நாளையும் பறித்து எடுத்தனர்.
மனங்களில் கல்லறைகள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது.
யாருமற்ற தனித்த நிலத்தில்
வரலாற்றின் துயரம் நிரம்பிய எலும்புக்கூடுகள்
எழும்பிச் செல்லுகின்றன.
மண்ணை பிரட்டி
வீரச்சொற்கள் எழுதப்பட்ட
கல்லறைகளின்
சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.
கல்லறைகளின் போர் நடந்து முடிந்துவிட்டது.
சனங்களுடன் அவர்கள்
கல்லறைகளை துடைத்தெறிந்து விட்டனர்.

யாரிடமும் பூக்கள் இல்லை.
எவருக்கும் கல்லறைகள் இல்லை.
அணைக்கப்பட்ட தீப்பந்தள் அலைந்து திரிகின்றன.
வீர முகம் நிரம்பிய புகைப்படங்களும்
கரைந்து போய்விட்டன.
சனங்கள் ஏமாற்றப்பட்டனர்.
வீரர்கள் இறுதியில் தோல்வியடைந்தனர்.
இந்த நாள் தோல்வியால் நிரப்பப்பட்டிருக்கிறது.
கனவு வளர்க்கப்பட்ட பெரிய மண்ணிலிருந்து
இனம் படுகொலை செய்யப்பட்ட
சுடலையின் வாசனை திரண்டபடி பெருமெடுப்பில் வீசுகிறது.
________________________________